Thursday, June 21, 2012

நானே இமாம் மஹ்தி (அலை) - ???


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள்.



இமாம் மஹ்தி பற்றி ஒரு சிறு அறிமுகம்.

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் மறுமையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கின்றார்கள். அவர்கள் நபி ஈஸா அலை அவர்கள் இவ்வுலகில் இறங்கு முன்பு இவ்வுலகிற்கு வருகை தருவார்கள் என ஹதீஸ்கள் சான்று பகர்கின்றன.

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் இறுதித் தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வழித்தோன்றல் என்பதையும், இமாம் மஹ்தி (அலை) அவர்களின் இறுதி நாளின் சமீபமாக அவரின் வருகையினால் மனித சமூகம் தனது யதார்த்தமான வாழ்வை அடைந்து கொள்ளும் என்பதையும் ஹதீஸ்கள் அறிவிக்கின்றன.

என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், அரபிகளை ஆட்சி செய்யும் வரை இவ்வுலகம் முடியாது. அவரது பெயர் என் பெயரை ஒத்ததாகும்.
(இப்னு மஸ்ஊத் (ரலி) திர்மிதி, அபூதாவூத்)

என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சியமைப்பார். அவர் பெயர் என் பெயரை ஒத்திருக்கும். (இப்னு மஸ்ஊத் (ரலி) திர்மிதி)

இவ்வுலகில், ஒருநாள் மட்டுமே எஞ்சியிருந்தால் என் குடும்பத்தைச் சேர்ந்த அவர் ஆள்வதற்காக அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான்.
(அபூ குறைறா (ரலி) திர்மிதி - இப்னுமாஜா)

நபி ஈஸா (அலை) அவர்கள் உலகில் தரிசனம் பெற்ற பின்னரே இமாம் மஹ்தி (அலை) அவர்கள் இறையடி சேர்வார்கள்.

மறுமையின் அடையாளங்களில் ஒன்றாக உள்ள இமாம் மஹ்தி (அலை) அவர்களின் வருகை நபி ஈஸா (அலை) அவர்களின் வருகைக்கு முன் இடம்பெறும்.இது பற்றி ஹதீஸ்களில் பல இடங்களில் முன்னறிவுப்பு செய்யப்பட்டுள்ளது பற்றி நாம் மேலே உள்ள அவரைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பில் பார்த்தோம். எட்டாம் நூற்றாண்டு முதல் இருபத்தியோராம் நூற்றாண்டு வரை அதாவது இன்று கழிந்து கொண்டிருக்கும் நூற்றாண்டு வரை பலர் நான் தான் அந்த வாக்களிக்கப்பட்ட மஹ்தி என உரிமை கொண்டாடியுள்ளனர்.சிலர் அவர்களைப் பின்பற்றியவர்களால் அவரே இமாம் மஹ்தி என உரிமை கொண்டாடுகின்றனர்.அப்படி உரிமை கொண்டாடியவர்களைப் பற்றிய தகவல்களைத் தரும் பதிவே இது.

தாங்களை வாக்களிக்கப்பட்ட மஹ்தி கூறிக்கொண்ட சிலர் கடைசியில் இஸ்லாத்தில் இருந்து பிரிந்து சென்று புதிய மதங்களை பிரிவுகளை உருவாக்கிக் கொண்டனர்.உதாரணமாக பாபிஸ்ம்,அஹ்மதிய இயக்கம் போன்றவையைக் கூறலாம்.1979 இல் நடந்த மக்கா முற்றுகை கூட தன் மைத்துனன் இமாம் மஹ்தி என்றும் அவரை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று கோரி முன்னேடுக்கப்பட்டவையே.


8 ஆம் நூற்றாண்டு
 
  • ஸாலிஹ் இன்பு தரீப் 
இந்த ஸாலிஹ் இன்பு தரீப் என்பவன் பர்காவதா ஒன்றியத்தின் (Barghawata) இரண்டாம் மன்னன் ஆவான்.இந்த ஒன்றியம் காரிஜியாக்களின் ஒரு பிரிவான சுப்ரி இயக்கத்துடன் இணைந்து உமையாக்களுக்கு எதிராக பேபர் (Beber) இனத்தவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய நாடாகும்.இது இன்றைய மொரோக்கோவில் அட்லாண்டிக் கடற்கரை ஓரமாக அமைந்திருந்தது.

உமையாக்களின் கலீபாவான ஹிஷாம் இன்பு அப்துல் மாலிக் அவர்களின் காலத்தில் தோன்றிய இந்த ஸாலிஹ் இப்னு தரீப் தான் புதிதாகத் தோன்றிய  மதத்தின் தீர்க்கதரிசி என அறிவித்துக் கொண்டான்.தனக்கு இறைவனிடமிருந்து புதிய வெளிப்பாடு அதாவது ஒரு புனித நூல் ஒன்று அருளப்பட்டதாகவும் அது 80 அத்தியாயங்களைக் கொண்டதாகவும் உள்ளதாக அறிவித்தான்.அரேபிய வரலாற்றாசிரியர் இப்னு கல்தூனின் தகவல்களுக்கு அமைய ஸாலிஹ் இன்பு தரீப் தன்னை ஒரு புதிய மதத்தின் நபியாக அறிவித்துக் கொண்டு இறைவனிடமிருந்து தனக்கு 80 அத்தியாயங்களைக் கொண்ட ஒரு புதிய புனித நூல் அருளப்பட்டதாக அறிவித்தான்.ஐந்து நேர தொழுகைக்குப் பதிலாக அவன் பத்து வேளை தொழுகையை நிறைவேற்றுமாறு மக்களை பணித்தான். அவன் தன்னைப் பின்பற்றும் மக்களை நிர்வாகம் செய்ய அவனே புதிய சட்டங்களை உருவாக்கினான்.இவைப் பின்பற்றிய மக்கள் சாலிஹை "ஸாலிஹ் அல் மூமினின்" என அழைத்தனர்.மேலும் அவன் அவனே வாக்களிக்கப்பட்ட மஹ்தி என்றும் நபி ஈஸா (அலை) தனக்கு முன்னாள் இருந்து தொழுகை நிறைவேற்றுவதாகவும் அறிவித்தான்.

ரமலான் மாதத்தில் நோன்பு பிடிப்பதற்கு பதிலாக ரஜப் மாதத்தில் நோன்பு பிடிக்குமாறு மக்களை அறிவித்தான்.தொழுகையை பத்து வேலையாக மாற்றிய இவன் வுழு செய்யும் முறையையும் மாற்றினான்.இஸ்லாத்தின் பல சட்ட திட்டங்களை மாற்றிய இந்த ஸாலிஹ் இப்னு தரீபின் புதிய மதம் பதினோராம் நூற்றாண்டில் அல்மோராவிட்ஸ்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

  • அப்துல்லாஹ் இப்னு முஆவியா
கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர்களில் ஒருவரான அபுதாலிப் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களின் மகனும் அலி (ரலி) அவர்களின் மூத்த சகோதரரான ஜபார் இப்னு அபூதாலிப் அவர்களின் பரம்பரையில் வந்தவர்தான் இந்த அப்துல்லாஹ் இப்னு முஆவியா.127 வது ஹிஜ்ரி ஆண்டின் இறுதிப் பகுதியில் கூபாவிலுள்ள ஷியாக்கள் இவரை தாங்களின் இமாமாக நியமித்துக் கொண்டனர்.உமையாக்களின் கலீபாவான மூன்றாம் யசீதுக்கு எதிராக புரட்சி செய்து இன்றைய ஈரானின் மேற்குப் பகுதியை இரண்டு வருடங்கள் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

கி.பி.747 இல் உமையாக்களினால் தோற்கடிக்கப்பட்ட அப்துல்லாஹ் இப்னு முஆவியா குராசானில் ஒரு சிறையில் காலமானார்.ஆனால் அவரை இமாமாக ஏற்று பின்பற்றியவர்கள் இப்னு முஆவியா மரணிக்கவில்லை என்றும் அவர் மறுமை நெருங்கும் போது இமாம் மஹ்தியாக வெளிவருவார் என்றும் நம்புகின்றனர்.


9 ஆம் நூற்றாண்டு


  • முஹம்மத் இப்னு ஹசன் இப்னு அலி

முஹம்மத் அல் மஹ்தி என்ற பெயரில் பிரசித்தி பெற்ற முஹம்மத் இப்னு ஹசன் இப்னு அலி ஷியாக்களின் பதினோராவது இமாமான ஹசன் அல் அஸ்கரி அவர்களின் மகனாவார்.ஹிஜ்ரி 255 இல் பிறந்த இவர் ஷியாக்களின் நம்பிக்கைப் படி இன்றுவரை மறைந்தே வாழ்ந்துவருகிறார்.ஷியாக்களின் இமாமியாஹ் பிரிவின் நம்பிக்கைப்படி இவர் மறுமை நெருங்கும் போது மறுமையின் அடையாளங்களில் ஒருவராக வெளிவருவார் என கூறப்படுகிறது.இவருக்கு 5 வயது இருக்கும் போது 12 ஆவது இமாமாக தெரிவு செய்யப்பட்டார். ஷியாக்களின் இமாமியாஹ் பிரிவின் நம்பிக்கைப் படி ஹிஜ்ரி 329 முதல் இவர் மறைந்தே வாழ்வதாக கூறப்படுகிறது.

ஆனால் சுன்னிகளான நமது இமாம் மஹ்தி (அலை) தொடர்பான நம்பிக்கைப் ஷியாக்களின் நம்பிக்கைக்கு முற்றிலும் வேறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


10 ஆம் நூற்றாண்டு

  • அப்துல்லாஹ் அல் மஹ்தி பில்லாஹ்
அப்துல்லாஹ் அல் மஹ்தி பில்லாஹ் பாதிமிய்யாஹ் கிலாபாத்தின் முதல் கலீபா ஆவர்.பாதிமிய்யாஹ் கிலாபாத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான இவர் தன்னை இமாமாக அறிவித்துக்கொண்டார்.இவர் ஷியாக்களின் இஸ்மாயிலியா பிரிவைச் சேர்ந்தவர்.தன்னைத்தானே இமாமாக அறிவித்துக்கொண்ட அப்துல்லாஹ் அல் மஹ்தி பில்லாஹ் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளான பாத்திமா (ரலி) அவர்களின் மகனான ஹுசைன் (ரலி) அவர்களின் பரம்பரையில் வந்தவர் என வாதிட்டார்.அபூ அப்துல்லாஹ் அல் ஷி என்ற இஸ்மாயிலிய ஷியா மத பெரியார் ஒருவரே இவரை மக்தியாக அறிவித்தார்.இவர்களின் இந்த பாதிமிய்யாஹ் கிலாபா மாவீரன் சலாஹுத்தீன் அய்யூபி அவர்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.


12 ஆம் நூற்றாண்டு

  • இப்னு தூமார்ட்
அல் மோராவிட்ஸ் கிலாபாத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்து அல் முகாத் என்ற கிலாபாத்தை நிறுவிய அபூ அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு தூமர்ட் தன்னை வாக்களிக்கப்பட்ட மஹ்தி என்றும் தான் எல்லா பாவங்களிலிருந்தும் மீட்சி பெற்றவர் என்றும் அறிவித்தார்.
இப்னு தூமார்டின் தர்கா - மொரோக்கோ



15 ஆம் நூற்றாண்டு

  • முஹம்மத் ஜான்பூரி
1443 செப்டெம்பர் 09 ஆம் திகதி இந்தியாவின் ஜான்பூரில் பிறந்த முஹம்மத் ஜான்பூரி தான் ஷியாக்களின் இமாமியாஹ் பிரிவின் ஏழாவது இமாமான மூஸா அல் கதீம் அவர்களின் பரம்பரையில் வந்தவர் எனவும் தானே மறுமை நெருங்கும் போது வெளிவரும் வாக்களிக்கப்பட்ட மஹ்தி எனவும் வாதிட்டார்.இவர் இந்த வாதத்தை மூன்று இடங்களில் கூறினார்,மக்காவில் ஒரு முறையும் இந்தியாவில் இரு முறையும் தானே மஹ்தி என்றார்.

 65 ஆவது வயதில் காலமான முஹம்மத் ஜான்பூரியை இமாம் மஹ்தியாக ஏற்றுக்கொண்டு பின்பற்றும் மக்களை "மஹ்தாவி" என அழைக்கின்றனர்.இவர்கள் பெரும்பாலும் இந்திய பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அதிகமாக வசிக்கின்றனர்.பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் "சிக்ரி" (zikri) பிரிவினரும் இவரையே இமாம் மஹ்தி என ஏற்றுக்கொள்கின்றனர்.



17 ஆம் நூற்றாண்டு

  • அஹ்மத் இப்னு அபி மஹல்லி
மொரோக்கோவின் தெற்கு பிராந்தியத்தில் பிறந்த அஹ்மத் இப்னு அபி மஹல்லி ஒரு காதி நீதிபதியாவார்.சாதி பரம்பரையின் (SAADI DYNASTY) ஆட்சிக்கெதிராக போர்க்கொடி தூக்கிய கிளர்ச்சிக் குழுவுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் ஒருவர்.    


19 ஆம் நூற்றாண்டு

இந்த நூற்றாண்டில் முன்னைய நூற்றாண்டுகளை விட பலர் நான் தான் இமாம் மஹ்தி என உரிமை கொண்டாடினர்.


  • டிபோநேகோரோ எனப்படும் முஸ்தகார்

முஸ்தகார் இந்தோனேசியாவின் ஜாவா பிராந்தியத்தில் இருந்த யோகிகர்தா (YOGYKARTA SULTHAN ) இன் இளவரசர்களில் ஒருவர்.இவரது தந்தை இறந்ததற்குப் பின் இவரது சகோதர் ஒல்லாந்தர்கள் சார்பாக நடந்துகொண்டமை இவரது எழுச்சிக்கு காரணமாக இருந்தது.உள்ளூர் மக்களின் பாரிய ஆதரவுடன் ஒல்லாந்தர்களுக்கு எதிராக போராடினர்.கிருஸ்தவர்களுக்கு எதிராக போராட தான் ஒரு தெய்வீகத்தன்மை வாய்ந்த ஓர் சக்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் நினைத்தார்.மேலும் தானே வாக்களிக்கப்பட்ட இமாம் மஹ்தி என்றும் ஜாவா பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாய்வழிக் கதைகளில் குறிப்பிடப்படும் "ரது ஆதில்" (RATU ADIL) லும் அவரே என நினைத்தார்.

1830 இல் ஒல்லந்தர்களால் சமாதான பேச்சுக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட முஸ்தகார் ஒல்லந்தர்களால் நாடு கடத்தப்பட்டார்.


  • பாப் (BAB) எனப்படும் அலி முஹம்மத் ஷிராசி

பஹாய் மதத்தின் ஆரம்ப கர்த்தாவான அலி முஹம்மத் ஷிராசி பாரசீகத்தின் ஷிராசி என்ற ஊரில் பிறந்தார்.1844 இல் தானே வாக்களிக்கப்பட்ட இமாம் மஹ்தி என்று அறிவித்தார்.பின்பு அவர் தனது பெயரை "பாப்"(BAB) என்று மாற்றிக்கொண்டார்.இவரே பஹாய் மதத்தின் ஆரம்ப கர்த்தா.இவரைப் பின்பற்றியே பஹாவுல்லாஹ் பஹாய் மதத்தை ஆரம்பித்தார்.

பஹாய் மதத்தில் உள்ளவர்கள் அலி முஹம்மத் ஷிராசி நபி இல்யாஸ் (அலை) மற்றும் நபி ஸகரிய (அலை) அவர்களின் ஆன்மீகத் திரும்பல் என்று நம்புகின்றனர்.அப்போதைய இரானின் பிரதம மந்திரி அமீர் கபீர் அவர்களால் மரணதண்டனை வழங்கப்பட்டு தப்ரிஸ் நகரில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.இன்று இவரின் நினைவாக இஸ்ரேலில் பாரிய நினைவுச்சின்னம் ஒன்று இருக்கிறது.


  • முஹம்மத் அஹ்மத்


1844 ஆகஸ்ட் 12 ஆம் திகதி பிறந்த முஹம்மத் அஹ்மத் ஒரு ஸூபி அறிஞ்சர் ஆவார்.1881 ஜூன் மாதம் அவரை அவர் இமாம் மஹ்தி என பிரகடனப்படுத்திக்கொண்டார்.பின் துருக்கி - மிஸ்ர் இணைந்த ஆட்சிகெதிராக வெற்றிகரமான ஒரு கிளர்ச்சியை முன்னெடுத்து 1885 இல் இன்றைய சூடானிய தலைநகரமான கார்த்தூம் நகரை கைப்பற்றினார்.இதன் பொது அவர் கைப்பற்றிய இடங்களை உள்ளடக்கிய பிரதேசத்துக்கு "மஹ்தியா" என பெயரிட்டார்.இவர் கார்தூமை நகரை கைப்பற்றிய வருடமே வபாத்தானார்.


  • மிர்ஸா குலாம் அஹ்மத் 


1835 பெப்ரவரி 13 திகதி இந்தியாவின் காதியான் என்ற நகரில் பிறந்த இந்த மிர்ஸா குலாம் தானே வாக்களிக்கப்பட்ட இமாம் மஹ்தி என்றும் நபி ஈஸா (அலை) என்றும் அறிவித்தார்.1889 அஹ்மதியா இஸ்லாம் என்ற புதிய மதத்தை உருவாக்கினார்.



20 ஆம் நூற்றாண்டு

  • முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் கஹ்தானி


1979 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி முழு முஸ்லிம் உம்மாவையும் கலங்கச் செய்த புனித மக்கா முற்றுகையை முன்னெடுத்த ஜுஹைமான் என்பவனாலே இவர் இமாம் மஹ்தி என பிரகடனப்படுத்தப்பட்டார்.இந்த சம்பவம் பற்றி முழுமையான விடயங்கள் கடைசியாக இட்ட பதிவில் .................

புனித மக்கா முற்றுகை 1979



  • ரியாஸ் அஹ்மத் கோஹார் ஷாஹி
1941 நவம்பர் 25 ஆம் திகதி பிறந்த ரியாஸ் அஹ்மத் கோஹார் M.F.I.என சுருக்கமாக அழைக்கப்படும் மஹ்தி பவுண்டேசனின்  நிறுவனர் ஆவார்.மேலும் Anjuman Serfaroshan-e-Islam என்ற இயத்தினதும் ஸ்தாபகர் இவரே.  இவர் நேரடியாக தன்னைத் தானே இமாம் மஹ்தி என அறிவிக்கவில்லை.ஆனால் இவரை பின்பற்றி நடக்கும் மஹ்தி ப்வுண்டசனின் பக்தர்கள் இவரை நபி ஈஸா (அலை) என்றும் கல்கி அவதார் என்றும் வாக்களிக்கப்பட்ட இமாம் மஹ்தி என்றும் நம்புகின்றனர்.மேலும் இவரது பக்தர்கள் சாஹியின் முகம் நிலவிலும் சூரியனிலும் நெபுலா எனப்படும் நட்ச்சத்திரத்திலும் மக்காவிலுள்ள ஹஜருல் அஸ்வத் கல்லிலும் தென்பட்டதாக கூறுகின்றனர்.1997 ஆம் ஆண்டு தான் நபி ஈஸா (அலை) அவர்களை அமெரிக்காவில் சந்தித்ததாகவும் ஷாஹி கூறியுள்ளார்.

2001 ஆம் ஆண்டு முதல் இவர் காணாமல் போய்விட்டார்.சிலர் இவர் 2003 ஆண்டு இறந்து விட்டதாக கூறுகின்றனர்.ஆனால் சிலர் இவர் பாகிஸ்தானில் ஆயுள் தண்டனை கைதியாக தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பதாக நம்புகின்றனர். Anjuman Serfaroshan-e-Islam இயக்கத்தினர் ஷாஹி இறந்துவிட்டதாகவும் மஹ்தி பவுண்டேசன் பிரிவினரோ ஷாஹி இறக்கவில்லை என்று நம்புகின்றனர்.



  • ஆரிபீன் முஹம்மத்


"ஆயாஹ் பின்" என்று மலேசியாவில் பிரசித்திபெற்றிருந்த ஆரிபீன் முஹம்மத் 1943 இல் மலேசியாவில் பிறந்தார்."கேரஜான் லஞ்சித்" அதாவது ஆங்கிலத்தில் "SKY KINGDOM" தமிழில் வானுலக இராஜ்ஜியம் என்ற இயக்கத்தின் ஸ்தாபகரும் தலைவருமான இவர் தனக்கும் சுவர்க்கத்துக்கும் இடையே நேரடியான தொடர்பு இருப்பதாக நம்பினார்.இவரது பக்தர்களோ இவர் ஜீசஸ்(நபி ஈஸா(அலை)) புத்தர்,சிவபெருமான் மற்றும் முஹம்மத் நபி (ஸல்) போன்றோரின் மறுபிறவி என நம்புகின்றனர்.மேலும் இவர் உலக அழிவு நெருங்கும் போது இமாம் மஹ்தியாக வெளிவருவார் என்றும் நம்புகின்றனர்.இவரின் பக்தர்களைப் பொறுத்தவரையில் இவரே வானத்தின் அரசன் மேலும் எல்லா சமயங்களினதும் பக்தியின் உச்ச இலக்கு.ஆரிபீன் முஹம்மத்தின் வானுலக இராஜ்ஜியம் 2005 ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கத்தால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.




21 ஆம் நூற்றாண்டு

  • தியா அப்துல் சஹ்ரா கதீம்


1970 ஆம் ஆண்டு ஈராக்கில் பிறந்த தியா அப்துல் சஹ்ரா கதீம் "ஜுண்டல் ஸமா" எனப்படும் SOLDIERS OF HEAVEN இயக்கத்தின் தலைவராவார்.இவர் தான் அலி (ரலி) அவர்களின் மறுபிறப்பு என்றும் மறைக்கப்பட்ட இமாம் மஹதியும் நானே என அறிவித்தான்.இவன் ஷியா பிரிவைச் சேர்ந்தவன் என்றாலும் 2007 ஆண்டு இராக்கில் நஜாப் பகுதியில் ஆஷுர தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலை திட்டமிட்டு மேற்கொண்டவன் இவனே.இந்த தாக்குதலின் போது அமெரிக்க மற்றும் இராக்கிய படைகளுடன் இடம்பெற்ற போராட்டத்தில் கொல்லப்பட்டான்.


சில பிரிவினர்களால் இமாம் மஹ்தி (அலை) என  உரிமை கொண்டாடப்படுபவர்கள்.


  • மாஸ்டர் பார்த் முஹம்மத் - நேசன் ஒப் இஸ்லாம் 
  • முஹம்மத் அல் நப்ஸ் அல் சகியா - ஷியாக்களில் ஒரு பிரிவினர்  
  • முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் அல் ஆப்த இப்னு ஜாபார் அல் சாதிக் - பாதியத் ஷியா 
  • ஜாபார் அல் சாதிக் - தாவுஸ்ஸியா ஷியா 
  • மூசா அல் கதீம் - வக்பியாத் ஷியா
  • முஹம்மத் இப்னு காசீம் - அலவிகள்
  • யஹ்யா இப்னு உமர் 
  • முஹம்மத் இப்னு அலி அல் ஹாதி - முகம்மதியா ஷியா 
  • அல் ஹாகிம் பி அம்ரல்லாஹ் 
  • ரியாஸ் அஹ்மத் கோஹார் ஷாஹி - மஹ்தி பவுண்டேசன் 
  • முஹம்மத் பயாசித் கான் பன்னி 
 
 
நான் மேலே குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக ஏதாவது தவறு இருப்பின் தெரிவிக்கவும் இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்கிறேன்
எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.
 
 
 
          

Thursday, June 14, 2012

புனித மக்கா முற்றுகை 1979


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.


1979 நவம்பர் 20 என்ற நாளை இஸ்லாமிய உலகம் ஒரு போதும் மறக்காது.ஏனெனில் அதற்கு இரு வலிமையான காரணங்கள் இருக்கின்றன.முதலாவது காரணம் எங்கள் கண்மணி நாயகம் ரசூலே கரீம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்று 1399 ஆண்டுகள் கழிந்து 1400 ஆவது வருடம் ஆரம்பித்த முஹர்ரம் முதலாவது நாள்.அடுத்து காரணம் 1979 நவம்பர் 20 ஆம் திகதி இடம்பெற்ற மஸ்ஜிதுல் ஹரம் முற்றுகை.இந்த மக்கா முற்றுகை பற்றியே இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

இஸ்லாமிய உலகை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கிய இந்த முற்றுகையை முன்னின்று நடத்தியவன் பெயர்  ஜுஹைமான் இப்னு முஹம்மத் இப்னு ஸைப் அல் தைபி.இவன் சவுதி அரேபியாவின் நஜ்த் பிரதேசத்தை சேர்ந்த  செல்வாக்கு நிறைந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவன்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நஜ்த் பிரதேசம் பற்றி இவ்வாறு முன்னறிவுப்பு செய்தார்கள்.


ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்,

ஒரு முறை அண்ணல் நபியவர்கள், இறைவா! எங்களின் ஷாமுக்கும், யமனுக்கும் அபிவிருதியை அருள்வாயாக எனப் பிரார்த்திக்க…. அங்கிருந்த நஜ்து வாசிகளில் ஒருவர், இறைத்தூதரே! எங்களின் நஜ்துக்கும் என்று வினவ, நபிகளார் மீண்டும் இறைவா! எங்களின் ஷாமுக்கும் யமனுக்கும் அபிவிருத்தியை அருள்வாயாக என்று கேட்டிட…. அதற்கு மீண்டுமவர், இறைத் தூதரே! எங்களின் நஜ்துக்கும் என்று வினவ, (அறிவிப்பாளர் சொல்கிறார் மூன்றுமுறை ஷாமுக்கும் எமனுக்கும் அபிவிருத்தியை இறைவனிடம் வேண்டிய நபிகளார், இறுதியில் தம் தோழர்களை நோக்கி……
'நஜ்து தேசம் அதிர்ச்சி தரும் சம்பவங்களும், (பித்னா) குழப்பங்களும் உற்பத்தியாகும் ஸ்தலமாகும். அங்கிருந்து ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என தமது விரலை நஜ்து தேசத்தின் பக்கமாக நீட்டிச் சொன்னார்கள்.

(ஆதாரம்: புகாரி- பாகம்-2, பக்கம் 1051)

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் முன்னறிவிப்பு செய்யப்பட ஒரு பிரதேசத்திளிருந்தான் இந்த ஜுஹைமான் இப்னு முஹம்மத் இப்னு ஸைப் அல் தைபி வெளிவந்தான்.இவன் தன் மைத்துனனான் முஹம்மத் அப்துல்லாஹ் அல் கஹ்தாணியை  வாக்களிக்கப்பட்ட மஹ்தி என்றும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அவருக்கு கட்டுப்பட வேண்டும் என்று அறிவித்தான்.
ஜுஹைமான் இப்னு முஹம்மத் இப்னு ஸைப் அல் தைபி

நஜ்த் பிரதேசத்தில் மிகவும் பலம்வாய்ந்த குடும்பத்தில் பிறந்த ஜுஹைமான் இஸ்லாத்தை நன்றாக கற்றறிந்த உலமாக்களில் ஒருவனாக இருந்தான்.மேலும் இவன் சவுதி பாதுகாப்புப் படையின் முன்னால் காப்ரல் ஆவான்.மேலும் முப்தி அப்துல் அஸீஸ் அல் பாஸ் அவர்களின் முன்னாள் மாணவர்களில் ஒருவன்தான் இந்த ஜுஹைமான்.பின்னாட்களில் முப்தி அவர்களுக்கு அதிராக போர்க்கொடி தூக்கியன் இவன்தான்.

சவுதி அரேபியாவை ஆளும் மன்னர் பரம்பரை சவுதி மண்ணை இஸ்லாத்தை விட்டு தூரமாக்கி மேலைத்தேய கலாச்சாரத்தை பரப்ப முயற்சி செய்கிறது இது தான் ஜுஹைமானின் அடிப்படை குற்றச்சாட்டு.மேலும் தனது மைத்துனன் முஹம்மத் அப்துல்லாஹ் அல் கஹ்தானியே இமாம் மஹ்தி என்றும் அது பற்றி அல்லாஹ் தனக்கு கனவு மூலம் அறிவித்ததாகவும் அவன் கூறினான்.உண்மையில் இந்த இரு பொய்யர்களையும் நம்பியவர்கள் இஸ்லாமிய அறிவற்ற பாமர முஸ்லிம்களல்ல இவர்களை நம்பியவர்களில் பெரும்பாலானோர் மதீனாவின் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் படித்த உலமாக்கள்.சவுதி அரேபிய தவிர்ந்த எகிப்து,யேமன்,குவைத் மற்றும் ஆபிரிக்காவின் கறுப்பின முஸ்லிம்களும் இந்த குழுவில் அடங்குவர்.

1979 நவம்பர் 20 அதாவது 1400 ஆவது ஹிஜ்ரி  ஆண்டின் முதல் நாள் கிட்டத்தட்ட 50000 தொழுகையாளிகளுக்கு தொழுகை நடத்த மஸ்ஜிதுல் ஹரத்தின் இமாம் முஹம்மத் அல் சுபைல் முன்வந்தார்.அப்போது தொளுகையாளிகளோடு கலந்திருந்த 500 க்கும் மேற்பட்ட கலகக்காரர்கள் அவர்களின் அங்கிகளுக்கிடையே ஒழித்து வைத்திருந்த ஆயுதங்களுடன் முன்வந்து மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் நுழையும் நுழைவாயில்கள் அனைத்தையும் சங்கிலிகள் கொண்டு பூட்டினார்கள்.இந்த நேரத்தில் அவர்களுடன் போராடிய இரு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்.
இந்த 500 பேரில் சில பெண்களும் குழந்தைகளும் அடங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மஸ்ஜிதுல் ஹரத்தை கைப்பற்றிய கலகக்காரர்கள் ஹரத்துக்கும் கட்டுப்பட்டு அறைக்கும் தொடர்பை ஏற்படுத்தும் தொலைபேசி அழைப்பை துண்டித்தனர்.பணையக் கைதிகளாக பிடிக்கப்பட்ட பல தொழுகையாளிகள் விடுவிக்கப்பட்டனர்.ஆனால் எல்லோரும் விடுவிக்கப்படவில்லை சிலர் தொடர்ந்தும் பணயக் கைதிகளாக ஹரத்துக்குள்ளே தடுத்து வைக்கப்பட்டனர்.ஆனால் இவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாது,மேலும் அவர்கள் மஸ்ஜிதின் மேல்மட்டங்களை தற்காப்பு நிலைகளாகவும் மினராக்களை ஸ்னைப்பர் நிலைகளாகவும் பயன்படுத்தினர்.

புனித மஸ்ஜிதுல் ஹரம் கலகக்காரர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்து ஒரு சில மணித்தியாலத்திலே மஸ்ஜிதை மீட்க களத்தில் குதித்தது சவுதி அரேபியாவின் பாதுகாப்புப் படை அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த இளவரசர் சுல்தான் அவர்களே களத்தில் படைகளை வழிநடத்தினார்.அன்றைய நாள் மாலை நேரத்துக்குள் முழு மக்கா நகரிலும் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.என்றாலும் மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் யுத்தம் செய்வதை இஸ்லாம் தடுத்துள்ளதால் சவுதியின் பாதுகாப்புப் படை உலமாக்களின் பாத்வாவுக்கு காத்திருந்தனர்.நிலைமையை உணர்ந்த முப்தி அப்துல் அஸீஸ் அல் பாஸ் அவர்கள் மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் நுளைய பத்வா வழங்கினார்.

உலமாக்களின் பத்வாவை பெற்றுக்கொண்ட சவுதி பாதுகாப்புப் படை பிரதான மூன்று வாயில்கள் ஊடாக முன்னணி தாக்குதலை தொடுத்தனர்.சவுதி பாதுகாப்புப் படை போன்றே கிளர்ச்சியாளர்களின் தாக்குதலும் மிகவும் கடுமையாக இருந்தது.மேலும் மினராக்களில் பதுங்கியிருந்த ஸ்நைபேர் துப்பாக்கிகளின் தாக்குதல் சவுதி பாதுகாப்புப் படைக்கு பெரும் சவாலாக இருந்தது.இறுதியில் நவம்பர் 27 ஆம் திகதியாகும் போது மஸ்ஜிதுல் ஹரத்தின் பெரும்பாலான பகுதிகதி சவுதி பாதுகாப்புப் படை வசம் வந்தது.கிளர்ச்சியாளர்களின் வசம் அப்போது பாவனையில் இருந்த நிலக்கீழ பாதை மட்டுமே இருந்தது.இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்த இந்த முற்றுகை 255 பேருக்கு மரணத்தை தேடிக்கொடுத்து முடிவுக்கு வந்தது.இதன்போது 560 பேர் காயம் அடைந்ததனர்.மேலும் இறந்தவர்களில் 127 சவுதி பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் 117 பேர் கிளர்ச்சியாளர்கள்.


ஜுஹைமான் இமாம் மஹ்தி என அறிவித்த அவன் மைத்துனன் முஹம்மத் அப்துல்லாஹ் அல் கஹ்தானி.




















கிளர்ச்சிக் குழுவின் தலைவன் ஜுஹைமான் உட்பட 67 கிளர்ச்சியாளர்கள் கைதி செய்யப்பட்டனர்.இவர்கள் அனைவரும் சவுதியின் மிக முக்கியமான நான்கு நகரங்களில் மக்கள் மத்தியில் சிறைச்சேதம் செய்யப்பட்டனர்.



 

இந்த சம்பவம் குறித்து மேலதிக தகவல் தெரிந்தவர்களோ அல்லது நான் மேலே பதிந்த விடயங்களில் ஏதாவது தவறு இருப்பின் தயவு செய்து உங்கள் கருத்துகளை குறிப்பிடவும்.திருத்தி கொள்கிறேன்.

எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.